நேற்று என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்தித்தேன் பேச்சு வாக்கில் அவர் சொன்னார் தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதாய். நான் சற்றே அதிர்ந்து போனேன், ஏனனில் அவர் மிகவும் செல்வாக்கு உள்ளவர். பிறகு சொன்னார் அவருடன் பணி புரியும் சக தோழர்கள் அவரை விடவும் அதிகமாக சம்பாதிப்பதாகவும் தனக்கு குறைவாக உள்ளதாகவும். அவருக்கு ஒரு கோடி மதிப்புள்ள ஒரு வீடு உண்டு, வங்கி கணக்கில் எப்பொழுதும் பணம் இருந்து கொண்டே இருக்கும். இப்படி இருந்தும் அவர் ஏழ்மை என்கிறார். நான் என்றைக்கும் யாரையும் ஒப்பிட்டு பார்பதில்லை என்ற கொள்கை உடையவன். அன்று என்னை நானே ஒரு சிறிய ஒப்பீடு செய்தேன்.
அதிகமில்லை ஒரு 15 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலை உணவு கூட உண்ண வழி இல்லாமல், உடுத்த நல்ல உடை இல்லாமல், உறங்க இடம் இல்லாமல் தவித்த காலம் அது. கல்லூரி படிப்பை முடித்து மேல் படிப்பு படிக்க வழி இல்லை என்று நான் அழுத காலம் அது. நிச்சயம் செய்த மாமன் மகள் என்னை வெறுத்தொருக்கி, சொந்தங்கள் எல்லாம் ஏளன படுத்தி, மனதால் நொறுங்கி இருந்த காலம். அன்று எனக்கு என்னவெல்லாம் கிடைக்கவில்லையோ இன்று சற்று அதிகமாகவே கிடைத்துள்ளது. ஆம், இன்று எனக்கு மட்டும் இல்லாமல் பசி என்று வருபவர்க்கு என்னால் உணவளிக்க முடிகிறது, நல்ல உடை அணிகிறேன், நல்ல வீடு உள்ளது , அழகான மனைவி அறிவான பிள்ளைகள், கை நிறைய என்று சொல்வதை விட மனம் நிறைந்த சம்பளம் வேறென்ன குறை எனக்கு. திருமணம் முடிந்து சில வருடங்கள் என் மனைவிக்கு பிள்ளை பேறு தள்ளி சென்றது அதற்கு பிறகு அதை ஈடு செய்யும் வகையில் இரட்டை பிள்ளைகள் பிறந்தன. நான் கேட்பதை விட எனக்கு எல்லாமே அதிகமாகத்தான் கிடைத்து வருகிறது. இது தானே ஒரு மனிதனுக்கு தேவை. கார், பங்களா எல்லாம் வாழ்கையில் ஆடம்பரம் தானே தவிர அதுவே ஆதாரம் இல்லை. இவை அனைத்தையும் யோசித்து பார்க்கும்பொழுது என் நண்பர் உண்மையில் ஏழ்மை நிலையில் தான் உள்ளார். இனி நீங்கள் யோசித்து பாருங்கள் நீங்கள் ஏழ்மையில் தவிக்கிறீர்களா இல்லை செல்வ செழிப்போடு உள்ளீர்களா என்று. நன்றி !!
Excellent :)
பதிலளிநீக்கு